உழைத்துக் கொடு

 பல நூற்றாண்டுகளுக்கு முன் தமிழகத்தை ஆண்ட மன்னன் கொடை வள்ளல் என்ற பெயர் பெற்றிருந்தான். அவனிடம்  யார் போய் எதைக் கேட்டாலும் அவன் அதைக் கொடுத்து வரவே அவன் புகழ் எங்கும் பரவி இருந்தது. பண்டிதர்கள் பாமரர்கள் என்று பாரபட்சம் காட்டாமல் பணம், பண்டம், நவரத்தினம், தானியம், என்று அவன் கொடுத்து வந்தது அவனை யாவர் பார்வையிலும் மிகவும் உயர்த்தி விட்டது.
ஒருமுறை மன்னன் தன் பிறந்தநாளின் போது மக்களுக்குப் பரிசுகளைக் கொடுத்துக் கொண்டிருந்தான். பரிசு பெற்றுக் கொள்ள மக்கள் நீண்ட வரிசையில் நின்று பரிசுகளை வாங்கிக் கொண்டு சென்று கொண்டிருந்தார்கள். மக்கள் கூட்டம் குறைந்து கொண்டே போயிற்று. கடைசியில் ஒரே ஒரு அந்தணர் மட்டும் பொறுமையாக வெகு நேரமாக நின்று கொண்டிருப்பதை மன்னன் கவனித்தான். அவன் அவரிடம் "பண்டிதரே! ஏன் அசையாமல் நின்று கொண்டிருக்கிறீர்கள்? வாருங்கள். உங்களுக்கு என்ன வேண்டுமோ தயங்காமல் கேளுங்கள். அதைக் கொடுக்கிறேன்" என்றான்.
அந்த அந்தணரும் "அரசே! எனக்குப் பொன்னும் வேண்டாம். மணியோ முத்தோ மானியமோ எதுவும் வேண்டாம். ஆனால் நீங்களாக நேற்றி வியர்வை நிலத்தில் விழ உழைத்துச் சம்பாதித்து வாங்கிய பொருள் ஏதாவது உங்களிடம் இருந்தால் அதைக் கொடுங்கள். மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொள்கிறேன்" என்றார்.
அதைக் கேட்ட மன்னன் திகைத்துப் போனான். அந்தணர் கூறியது அவன் மனதில் சுருக்கென்று தைத்தது. ஆம். அவன் தன் பொருள் என்று எதை எல்லாம் எண்ணினானோ அவை தான் உழைத்துச் சம்பாதித்தவை அல்ல என்பதை அறிந்து கொண்டான். ஆம் அவை யாவும் மக்கள் கொடுத்தவரிப் பணத்தில் வாங்கப் பட்ட பொருள்களே! இதை உணர்ந்த அவன் அந்த அந்தணரிடம் "பண்டிதரே! நானாக உழைத்துச் சம்பாதித்தது என்று எதுவும் இப்போது என்னிடம் இல்லை.